கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் பதவி விலகல்.!
அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ரைகம் உடுகஹபத்துவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தில்,
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர், சங்கத்தின் வளர்ச்சிக்காக தனது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்ததாக தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடிகள், நிர்வாக சவால்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு சங்கங்களில் தமது சங்கத்தை முன்னணி நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது சங்கம் கடுமையான அரசியல் தலையீட்டுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிருப்தி வெளியிட்டும் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படாததால் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், தலைவர் பதவியின் மதிப்பை குறைத்துக்கொண்டு தொடர விரும்பாத காரணத்தினாலேயே பதவி விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உப தலைவரும் குறித்த அரசியல் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.