வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை கடத்தி கப்பம் கோரிய மூவர் கைது.!
சுற்றுலாப் பொலிஸார் எனப் போலி அடையாளத்தைக் காட்டி, பிரேசில் நாட்டுப் பிரஜை ஒருவரைக் கைவிலங்கிட்டுக் கடத்தி, 30 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் உனவடுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி, தல்பே பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரேசில் நாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்குள் நுழைந்த இரு சந்தேகநபர்கள், தாங்கள் சுற்றுலாப் பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி அவரது அறையைச் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அந்தப் பயணியின் பிரேசில் நாட்டு கடவுச்சீட்டு, அமெரிக்க ஆவணங்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல உடைமைகளை அவர்கள் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர், இவர்களுடன் மூன்றாவது சந்தேகநபர் ஒருவரும் இணைந்து கொண்டுள்ளார்.
மூன்று பேரும் சேர்ந்து அந்தச் சுற்றுலாப் பயணியைக் கைவிலங்கிட்டு அச்சுறுத்தியுள்ளதுடன், அவரைக் கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால் கொழும்பிலுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதற்காக அவர்கள் 30 இலட்சம் ரூபாவை கப்பமாகக் கோரியுள்ளனர். அதில், மோட்டார் சைக்கிள் ஒன்றை அடகு வைத்ததன் மூலம் தங்களால் 2 இலட்சம் ரூபா திரட்டப்பட்டுள்ளதாகக் கூறிய சந்தேகநபர்கள், மீதமுள்ள 28 இலட்சம் ரூபாவை உடனடியாகச் செலுத்துமாறு சுற்றுலாப் பயணியை வற்புறுத்தியுள்ளனர்.
இது குறித்துக் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், உனவடுன சுற்றுலாப் பொலிஸார் உடனடியாக விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து 25 மற்றும் 26 வயதுடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘ஆல்டோ’ ரகக் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களைக் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உனவடுன பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.