உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நிவாரணங்களை விடுத்து உழைப்புக்கு மாறுங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

சமூக நலன்புரித் திட்டங்களின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குடும்பமும் உண்மையாகவே வலுவூட்டப்படுகிறதா என்பதை அளவிடக்கூடிய முறையான மதிப்பீட்டு முறையொன்றைத் தயாரித்து, அதன் அடிப்படையில் வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கு தெரிவித்தார்.

அதன்படி, பல்வேறு நிறுவனங்களினூடாக சிதறிப் போயுள்ள நிதி ஒதுக்கீடுகளை ஒருங்கிணைத்து, துல்லியமாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இதன்போது, சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ‘சமூக சக்தி’ வேலைத்திட்டம் மற்றும் ஏனைய கிராமிய அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள், பிரதேச சபை மட்டத்தில் திட்டங்களுக்காக எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், அவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், சமூக மேம்பாட்டிற்காக ஏற்றுமதித் திறனைக் கொண்ட தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக, அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு அமைச்சின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள கடன் மற்றும் உதவிகளை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

அத்துடன், இந்த வருடத்திற்குள் இரண்டு இலட்சம் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களை உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி, அவர்களை நிவாரணங்களில் தங்கியிருப்பதில் இருந்து விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், தற்போது 16,000 குடும்பங்களுக்கு உள-சமூக மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறுபவர்களை வெறுமனே நிவாரணங்களில் மாத்திரம் தங்கியிருக்கச் செய்யாமல், அவர்களை பகுதி நேர உழைப்புப் பங்களிப்புகளில் ஈடுபடுத்துவது முக்கியம் என்றும், அதற்காக பெருந்தோட்டத்துறை போன்றவற்றில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

மேலும், எவ்வித உழைப்புப் பங்களிப்பையும் வழங்க முடியாத மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அல்லது நாள்பட்ட நோயாளிகளைக் கொண்ட குடும்பங்களை அரசாங்கம் முழுமையாகப் பராமரிக்கும் அதேவேளையில், உழைக்கும் ஆற்றல் கொண்ட ஏனைய பிரிவினர் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் காலப்பகுதியில் நாட்டின் உற்பத்தி செயல்முறைக்கு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்பு குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஒவ்வொரு அமைச்சும் தனித்தனியாக பணம் செலவழிப்பதற்குப் பதிலாக, ஒரு குடும்ப அலகின் தேவைகளைத் துல்லியமாக இனங்கண்டு “குடும்ப அபிவிருத்தித் திட்டம்” ஒன்றை தயாரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற வெளிநாட்டு உதவிகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் வலுவூட்டல் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தொழிலுக்குச் செல்லும் தாய்மார்களுக்கு ஒரு நிவாரணமாகவும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகவும் தற்போது திட்டமிடப்பட்டுள்ள 10 பகல்நேர பராமரிப்பு நிலையங்களை இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யவும், எதிர்வரும் சில வருடங்களுக்குள் நாடளாவிய ரீதியில் இவ்வாறான 50 நிலையங்களை அமைக்கும் இலக்கை நோக்கி பயணிக்கவும், அதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்காக பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற பொது இடங்களுக்கு இலகுவாக வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக 283 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மேலும் கவர்ச்சிகரமானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0