தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.!
கடந்த அரசாங்கங்களை விட இந்த ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று மடங்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தொழில் பயிற்சி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு பயிற்சிகளை வழங்கும் ஒரேயொரு உள்ளூராட்சி மன்றமாகவுள்ள மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபையின் கீழ் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு, ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் இது தொடர்பான நிகழ்வு இன்று மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் செந்தில்குமார் தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் ஏ.எம்.பைசால், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, மட்டக்களப்பு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி எம்.ஆர்.எப்.றிப்கா ஆகியோர் கலந்துகொண்டதுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இளங்குமுதன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கிநாதன், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், ஏறாவூர் நகரசபையின் தலைவர் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தொழில் பயிற்சி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கும் தொழில் பயிற்சி நிலையத்தினை கொண்டு இயங்கும் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தொழில் பயிற்சி நிலையத்தில் கணினிப் பிரிவில் என்.வி.கியு. தரம் மூன்று, நான்கு ஆகியவற்றினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சி நிலையில் 120 மாணவர்கள் கணிணி பயிற்சியை பூர்த்தி செய்துள்ள நிலையில் கணிணி பயிற்சியை பூர்த்தி செய்த மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள நூலகங்களில் கடமையாற்றும் நூலகர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிரமாண்டமான முறையில் நடாத்தப்பட்ட இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், நூலகர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் நூலகர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது தொழில் பயிற்சி நிலைய மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,
கிழக்கு மாகாண சபையினுடைய செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலே தெரிவு செய்யப்பட்ட இரு சபைகளில் ஒன்று தான் ஆரையம்பதி சபை. அதற்காகவே, இந்த பிரதான வீதியிலே இருக்கிற கடைத் தொகுதியைக் கட்டுவதற்காக 110 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அது மாத்திரமல்ல, அடுத்ததாக மண்முனைப்பற்று சபைக்கு அந்த உதவித்தொகை வழங்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில், இந்த சபையினுடைய செயற்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கின்றது என்பதனைச் செயலாளர்களிடம் நான் சான்றுபடுத்த வேண்டும். கௌரவமான தவிசாளரிடம் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இலஞ்சம், ஊழலற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். அதற்காக உதவி ஒத்தாசை செய்யுங்கள் என்கிற ஒரு வேண்டுதலை முன்வைத்திருந்தேன்.
உண்மையாக இந்த சமூக சேவை செயற்பாடுகளிலே ஈடுபடுகின்ற பொழுது, இவ்வாறு பணத் தேவைகள் அற்ற ஒரு பொதுமகன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டால் அது நிர்வாகிகளுக்கு மிகவும் இதமாக இருக்கும். கடந்த காலங்களிலே ஆங்காங்கே இடம்பெற்று வந்த ஊழல், மோசடிகளால் தான் இன்று வரைக்கும் பல்வேறு சிக்கல்களை இந்த சபைகள் எதிர்கொண்டவை என்பதனைச் செயலாளர் கூட அறிந்திருப்பார் என்று நான் நம்புகின்றேன். கடந்த காலங்களிலே சில சபைகளிலே ஏற்பட்ட மோசடிகள், தவறுகள், வழக்குகள் என்பன தற்போது கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
நாங்கள் தற்போது இருக்கின்ற காலகட்டத்திலே பாரியளவு நிதி ஒத்தாசைகளைப் பெற்றிருக்கின்றோம். அபிவிருத்தியின் பால் கூடுதலான காசு தற்போதைய அரசினால் எங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களைப் போல் அல்லாது முப்படியான பண நிதி ஒத்தாசைகள் எங்களுக்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பு பிராந்தியம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியம், கஷ்ட பிரதேசங்கள் பல இருக்கின்றது. வாகரை, பட்டிப்பளை போன்ற பிராந்தியங்கள் மற்றும் மண்முனைப்பற்று, வெல்லாவெளி போன்ற பிரதேசங்கள் பின்தங்கிய பிரதேசங்களாக இருக்கின்றது.
என்னிடம் ஒரு தவிசாளர் குறிப்பிட்டிருந்தார், “சார், நீங்கள் பிரதான வீதியிலே போகின்ற பொழுது ஒரு சில சபைகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால், நீங்கள் உள்ளுக்குள் போய் அதைப் பார்க்க வேண்டும்,” என்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அந்த அடிப்படையில் தான் 2026 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடுகளை வழங்குகின்ற பொழுது, மாகாண நிதியிலே நாங்கள் ஏற்கனவே சொன்ன வாகரைக்கும், பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளி, மண்முனைப்பற்று போன்ற பிரதேசங்களுக்குக் கூடுதலான நிதிகளை உதவி உள்ளூராட்சி மன்றம் ஊடாக வழங்கியிருக்கின்றோம். ஆளுநர் அவர்கள் அவற்றினை முற்பரிசீலனை செய்து அந்த அனுமதியை தந்தார்.
இங்கு இடம்பெறுகின்ற எல்லா அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இந்த பிராந்தியத்தினுடைய பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் மற்றும் ஆளுநருடைய அனுமதியுடனேயே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே, ஆளுநர் அவர்கள் கூட அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு விடயம் – “வாகரைப் பிரதேசத்தினை அடிக்கடி சென்று பாருங்கள், பின்தங்கிய பிரதேசம், மக்களுக்குக் கூடுதலான தேவைப்பாடு இருக்கின்றது,” என்ற கருத்தினைப் பலமுறை சொல்லியிருக்கின்றார். ஆனால், அதற்குச் சில குறைபாடுகள் இருக்கின்றது. நிர்வாக ரீதியாகக் காரியாலய உத்தியோகத்தர்கள் அங்கு இல்லை என்ற ஒரு அவா தவிசாளருக்கு இருக்கின்றது. அவற்றினை எதிர்வரும் காலகட்டத்தில் செய்துகொடுப்போம் என்ற ஒரு வாக்குறுதியை நான் அவருக்கு அளிக்கின்றேன்.
கட்டாயமாக வாகரையிலே போதியளவு நிதி ஒதுக்கீடு செய்தாலும், குறிப்பிடக்கூடியவாறு ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தர் இல்லாத குறைபாட்டினைக் தவிசாளர் முன்வைத்தார். அவற்றை நாங்கள் நிவர்த்தி செய்து வழங்குவோம். தற்போது அபிவிருத்திக்காகப் பெருந்தொகை பணம் கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்டிருக்கின்ற பொழுது, நாங்கள் அதனைப் முன்னெடுப்பதற்கு காரியாலய கட்டமைப்பினையும் ஏற்படுத்திக் கொடுப்பது அமைச்சின் செயலாளர் உட்பட திணைக்களத்தினுடைய தலைவர், ஆணையாளர், உதவி உள்ளூராட்சி ஆணையாளருக்குரிய பொறுப்பாக இருக்கின்றது.








