உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மகாவலி அதிகார சபைக்கு அதிரடிப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை பழைய கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இது தொடர்பாக உரிய திணைக்கள அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பிற்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக விடுவித்து வழங்குமாறு மகாவலி திணைக்களத்துக்கு உத்தரவிட்டதுடன், எதிர்காலத்தில் மேய்ச்சல் தரை சார்ந்து மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகள் எட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரம் 900 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்பட்ட 2 ஆயிரத்து 306 வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், இந்த ஆண்டு 8 ஆயிரத்து 625 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகப் பேசப்பட்டது.

தொடர்ந்து கிராமியப் பாலங்கள், வீதிகள், வீட்டுத்திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், எஞ்சிய பணிகள் மற்றும் அவற்றுக்கான நிதித் தேவைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட, குறிப்பாக விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகளை வழங்கும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ள, இரண்டு குளங்களை இணைக்கும் ‘முந்தனையாறு நீர்ப்பாசனத் திட்டம்’ குறித்து ஆராயப்பட்டதுடன், அதன் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன் புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி – மண்டூர் பாலங்களின் அபிவிருத்தி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடையாளம் காணப்பட்ட சகல பகுதிகளுக்கும் யானை வேலிகளைப் பகிர்ந்தளித்து, அவற்றை அமைக்கும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் காரியாலயம் மட்டக்களப்பில் இல்லாமையால் நெல் கொள்வனவு சரிவர இடம்பெறுவதில்லை என்று மக்கள் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு உரிய முறையில் சிறந்த தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, அங்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ள மூன்று புதிய திட்டங்களின் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்தத் தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படும் எனவும், வரவிருக்கும் பாதீட்டின் ஊடாக மாவட்டத்துக்குத் தேவையான கூடுதல் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இக்கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0