இலங்கை – ஜப்பான் இடையே உயர்மட்ட பாதுகாப்பு பேச்சு! – கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தீர்மானம்.!
இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோருக்கிடையிலான உயர்மட்ட சந்திப்பு டோக்கியோவில் உள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், இந்தோ–பசுபிக் பிராந்தியத்தில் “சுதந்திரமான மற்றும் திறந்தநிலை” கொள்கையின் அடிப்படையில் பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கையின் பங்கும், ஜப்பானுடனான ஒத்துழைப்பும் முக்கியமானவை என வலியுறுத்தினார்.
பதிலளித்த பிரதி அமைச்சர் அருணா ஜயசேகர, இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் அதன் வகிபாகத்தை எடுத்துரைத்தார்.கடந்த காலத்தில் ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படை கொழும்புத் துறைமுகம் வருகை மற்றும் இலங்கை கடற்படையுடன் இணைந்து நடத்திய பயிற்சிகள் பாராட்டப்பட்டது.
எதிர்காலத்தில் கூட்டு கடற்படை பயிற்சிகள் மற்றும் பணியாளர் பரிமாற்றங்களை விரிவுபடுத்த இருதரப்பும் ஒத்துக் கொண்டனர்.
மேலும், இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கப்பல்களை வழங்கியமை, வானிலை ஆய்வுத் துறைக்கான ‘டொப்ளர் ரேடார்’ அமைப்பை நிறுவியமை, அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளிக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றுக்கு பிரதி அமைச்சர் நன்றியைக் கூறினார்.
பிரதி அமைச்சர் அருணா ஜயசேகர, சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மதித்து, இலங்கையின் நடுநிலை மற்றும் பக்கச்சார்பற்ற வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ஜப்பானுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதாகவும்மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தும், ஜப்பான் தேசிய பாதுகாப்பு கலாசாலையின் வாயிலாக இலங்கையர்களுக்குப் பயிற்சி வழங்கும் திட்டங்களை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.