நீதி அமைச்சர் மீது முறைப்பாடு – நாடாளுமன்றில் பதற்றம்.!
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது மீது அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் அநாகரிக சைகை செய்ததாகச் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டதால், நாடாளுமன்றத்தில் பெரும் பதற்ற சூழல் ஏற்பட்டது. அஜித் பி. பெரேரா, “சபையில் ஊழல்வாதிகளான அமைச்சர்கள் இருப்பதுபோலவே, செயற்திறனற்ற அமைச்சர்களும் உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
அஜித் பி. பெரேரா, நீதி அமைச்சர் செய்த அநாகரிகச் செயலை சாட்சியமாக சபையில் அமர்ந்த அனைவரும் பார்த்ததாகக் கூறி, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உறுப்பினர்களை, “ஒலிவாங்கி வழங்கப்படாதநிலையில் பேசப்படும் விடயங்கள் ஹன்சாட்டில் பதியப்படாது, ஆகையால் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம்” என எச்சரித்தார்.இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நீண்ட நேரம் வாக்குவாதங்கள் நடைபெற்றன