மத்திய கிழக்கு போர்: இலங்கை பொருளாதாரத்திற்கு கடும் தாக்கம் – சமல் சஞ்சீவ குற்றச்சாட்டு.!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம், இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெஹிவளை – கல்கிஸை மாநகர சபை உறுப்பினர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள், மின்சாரம், சுற்றுலா மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
உலகளாவிய நெருக்கடிகளை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் தவறிவிட்டதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.மேலும், எரிபொருள் விலை உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதி, மின் உற்பத்தி சிக்கல் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் உர மற்றும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார்.
தேசிய மட்டத்தில் ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என வலியுறுத்திய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.