போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி நிலவ வேண்டும் – பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்த சஜித்.!
உலகெங்கும் போரின் தீப்பொறிகள் அணைந்து, அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை நிறைவு செய்யும் இந்நேரத்தில், இஸ்லாம் போதிக்கும் மனிதநேய மதிப்புகளை ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார். நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் ஆகியவை அமைதி மற்றும் நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைக் கோட்பாடுகளாக விளங்குகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரமழான் நோன்பு, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகத் தூய்மையை வளர்க்கும் முக்கிய காலமாகும் எனவும், இக்காலத்தில் மனிதர்களிடையே கருணை, ஒற்றுமை மற்றும் பரிவு ஆகிய பண்புகள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உலகின் பல பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு தீர்வாக, பொறுமை, கருணை, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். வெறுப்பை கருணையால் எதிர்கொண்டு, பிளவுகளை ஒற்றுமையால் சமாளிக்கும் அணுகுமுறையால் மட்டுமே உலகளாவிய நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மக்களின் சிந்தனைகளை நல்வழிப்படுத்துவதன் மூலம் மட்டுமே நிலையான அமைதியை உருவாக்க முடியும் என்றும், ரமழான் காலத்தில் வெளிப்படும் உயர்ந்த மனித பண்புகள் உலகம் முழுவதும் அமைதி மற்றும் சமூக நீதி நிலைநாட்ட உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலகெங்கும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.