நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சைபர் பாதுகாப்பு பயிற்சி – டிஜிட்டல் திறன் மேம்பாட்டுக்கு முக்கிய முன்னேற்றம்.!
அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு அண்மையில் நடத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழங்கிய அறிவுறுத்தலுக்கு இணங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவும் இணைந்து இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்தன. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சியில், சமூக ஊடகங்களை பொறுப்புடனும் சட்டபூர்வமாகவும் பயன்படுத்துதல், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல், தகவல் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் இரகசியத் தகவல்களை பாதுகாப்பது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த முயற்சி, அரச நிறுவனங்களில் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தும் தேசிய அளவிலான திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதுடன், சைபர் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.