சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு வருகை.!
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது என்று அந்த அமைப்பின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கோசாக் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கொள்கை ரீதியான முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக இலங்கை வரவுள்ள இந்தக் குழுவினர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுகளை முன்னெடுப்பர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளை ஒன்றிணைத்து நிறைவு செய்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, வரி மறுசீரமைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு செயன்முறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தக் குழுவினர் அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் விரிவாக ஆராயவுள்ளனர்.
இந்த மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், இலங்கைக்கு கிடைக்க வேண்டிய அடுத்தகட்ட நிதி உதவிகள் தடையின்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.