பாழடைந்த கிணற்றிலிருந்து இளம் தாய் உயிருக்கு போராடிய நிலையில் மீட்பு.!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு வயல் வெளியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண் கொத்தியாபுலையை சேர்ந்த 27 வயதான குகநாதன் ரணுஸ்கா எனும் இளம் தாயாவார்.
மீட்கப்பட்ட பெண் தனது குழந்தையுடன் நேற்றைய தினம் (19) மட்டக்களப்பு நகருக்கு நகை அடகு எடுக்க சென்ற நிலையில் காணாமல் போனதாக தெரிவித்து அவரது உறவினர்களால் தேடப்பட நிலையில் இன்று காலை தாந்தாமலை நெல்லிக்காடு வயல்வெளியிலுள்ள கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற குழந்தை கொத்தியாபுலை வயல் வெளியில் இருந்து அழுதுகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றுக்குள் பல நாட்களுக்கு முன் இறந்த ஒருவரது சடலம் அழுகிய நிலையில் உருக்குலைந்து கிடப்பதாக தெரியவருகிறது.
மீட்கப்பட்ட தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.
