யாழில் யானைகள் அட்டகாசம்; அச்சத்தில் மக்கள்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் உட்புகுந்து வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. குறித்த சம்பவம் அப்பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களம் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கி விட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளத்திலிருந்து வெற்றிலைக்கேணி வரை வன ஜீவராசிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அப் பிரதேசங்களில் இதுவரை யானைகள் அங்கு காணப்பட்டிருக்கவில்லை. இந் நிலையில் குறித்த யானைகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு ஒரு யானை தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பட்ட நிலையில் அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
