மட்டக்களப்பில் காணி பிரச்சினை: பிரதேச மக்கள் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு.!
மட்டக்களப்பின் எல்லைப்பிரதேசங்களில் மக்கள், வாழ்வாதார முன்னேற்றத்தைப் பொருட்படுத்தி காணிகளைப்பெற முயலும்போது பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதே சமயம், வனஇலாகாவின் அச்சுறுத்தல்களும் அவர்கள் மீதான பிரச்சினைகளை அதிகரிக்கின்றன என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெரியபுல்லுமலை மற்றும் கரடியனாறு பிரதேசங்களில் காணி தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம், சம்பூர் மற்றும் திரியாய கிராமங்களில் காணி பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஆவணப்படக் காட்சியும், கலந்துரையாடலும் இடம்பெற்றது.
நிகழ்வை அகம் மனிதாபிமான வளநிலையம் மற்றும் பிசிசிஜே இணைந்து கிழக்கு மாகாண காணி வலையமைப்பின் வழியாக முன்னெடுத்தனர். நிகழ்வில் அகம் மனிதாபிமான வளநிலைய பணிப்பாளர் க. லவகுசராசா, இணைப்பாளர் மதன், கிழக்கு மாகாண காணிவலையமைப்பின் தலைவர் எஸ். சிவயோகநாதன், உறுப்பினர் ஜோதி, பிசிசிஜே அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச கிராம சேவையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆவணப்படக் காட்சியைத் தொடர்ந்து பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணி பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அவர்களது கருத்துகளும் பதிவு செய்யப்பட்டது.அதேபோல், கரடியனாறு பிரதேசத்திலும் ஏஎச்ஆர்சி மற்றும் பிசிசிஜே இணைந்து, காணி பிரச்சினைகளைப் பற்றிய கலந்துரையாடல் மற்றும் ஆவணப்படக் காட்சி நடத்தினர்.
இதில் பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் மூலம், மக்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும், காணி பிரச்சினைகளை சரியான முறையில் தீர்க்க தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க விழிப்புணர்வு உருவாக்கியது.
