சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!
முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதுவரை இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறு ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ அல்லது அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்போ சுரேஷ் சலேவுக்கு எதிராக எந்தவித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெறுவதற்காக சிலர் திட்டமிட்டு பரப்பிய குற்றச்சாட்டுகளையே தற்போதைய அரசு ஆதாரமாகக் கொண்டு செயல்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.யுத்த காலத்தில் நாட்டுக்காகச் சேவை செய்த ஒரு மூத்த இராணுவ அதிகாரியை தற்போதைய அரசு பழிவாங்கும் நோக்கில் குறிவைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலையில், சிறிய காரணங்களை முன்வைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் தவறான பார்வையை உருவாக்க முயற்சி செய்யப்படுகின்றது என்றும் சரத் வீரசேகர குற்றம் சாட்டினார்.