சட்டவிரோத கடற்றொழிலால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு – மீனவ அமைப்பு குற்றச்சாட்டு.!
உள்ளூர் இழுவைமடி படகுகள் மற்றும் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் ரோலர்களால் வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கடற்றொழில்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக இழுவைமடி படகுகள், சுருக்குவலை தொழில், டைனமெட் மீன்பிடி போன்றவை மீன் வளங்களை அழித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.மேலும், வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் பிற மாவட்ட மீனவர்கள் சட்டவிரோதமாக வாடி அமைத்து கடல் வளங்களைப் பயன்படுத்துவதாகவும், இதனால் உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதார இழப்பைச் சந்தித்து வருவதாகவும் கூறினார்.
இதனுடன், மண்ணெண்ணெய் பற்றாக்குறை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளிலும், பிடிக்கப்பட்ட மீன்களை குளிரூட்டிப் பாதுகாத்து சந்தைக்கு கொண்டு செல்வதிலும் கடும் சிரமங்கள் நிலவுகின்றன. இதனால் மீனவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாகவும், அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.