சமூக செயற்பாட்டாளரும், சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவர் விளக்கமறியலில்.!
மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவரை ஏழு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருக்கு எதிராக முகப்புத்தகத்தில் அவதூறானதும் உண்மைக்கு புறம்பானதுமான கருத்துகளை தெரிவித்து வந்தமை தொடர்பிலேயே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மைலம்பாவெளியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியில் முச்சக்கரவண்டி திருத்தும் நிலையம் ஒன்றினை அனுமதியில்லாமல் அமைத்து நடாத்துவது குறித்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் கொக்குவில் பொலிஸ் நிலையம் ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் காணி சீர்திருத்த ஆணையாளருக்கு எதிராக தொடர்ச்சியாக முகப்புத்தகம் ஊடாக உண்மைக்கு புறம்பான தகவல்களையும் அவதூறு ஏற்படுத்தும் கருத்துகளையும் தெரிவித்து வருவதாக ஆணையாளரினால் கொக்குவில் பொலிஸார் ஊடாக நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டதற்கு அமைய குறித்த விளக்கமறியல் உத்தரவு கடந்த 16ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.