இந்தியப் பெருங்கடல் முக்கியத்துவம்: சமநிலையான வெளியுறவுக் கொள்கை அவசியம் – நாமல் ராஜபக்ஷ.!
உலகளாவிய அதிகாரப் பகிர்வில் வேகமான மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து இலங்கை சமநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
புதுடில்லியில் நடைபெற்ற ‘WION’ உலகளாவிய உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இந்தியப் பெருங்கடல் திகழ்வதை சுட்டிக்காட்டினார். உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கும், கொள்கலன் போக்குவரத்தில் பாதியளவும் இப்பிராந்திய கடல் வழிகளின் மூலம் நடைபெறுகின்றன என்றும், டிஜிட்டல் தகவல் தொடர்புகளுக்கான கடலடி கேபிள்களும் இப்பகுதியை ஊடறுத்துச் செல்கின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா இப்பிராந்தியத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய இணைப்பு மற்றும் ‘நீலப் பொருளாதாரம்’ துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது இலங்கைக்கு பலனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்கால உலக அதிகாரத்தை செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் தீர்மானிக்கும் எனக் கூறிய அவர், இத்தொழில்நுட்பங்கள் நாடுகளுக்கிடையிலான பொருளாதார இடைவெளியை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றார்.
அத்துடன், பிராந்திய முதலீடுகளை மையமாகக் கொண்ட ‘தெற்காசிய ஹைட்ரஜன் பாதை’ ஒன்றை உருவாக்கும் யோசனையையும் முன்வைத்தார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதி மற்றும் ஒத்துழைப்பின் மையமாக நிலைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும், இப்பகுதியில் ஏற்படும் ஸ்திரமின்மை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.