நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தயார்; அத்தியாவசிய சேவைகளை முடக்காது முன்னெடுங்கள்.!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், நாட்டின் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (15) அமைச்சுகளின் செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளால் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற முக்கிய துறைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றுக்கான எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள் வருமாறு,
எரிபொருள் கையிருப்பு
சுகாதாரத்துறை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
வீட்டிலிருந்து பணியாற்றும் முறை
தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கியூ.ஆர். குறியீட்டு முறைமை
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையில் (கியூ.ஆர்.) காணப்படும் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து, அதனை மேலும் முறைப்படுத்த வேண்டும்.
கூட்டுப் பொறுப்புடன் செயற்படல்
எதிர்கால நிலைமைகளை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், அனைத்துத் துறைகளும் தனித்தனியாக முடிவெடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்த நாட்டு நலன் கருதி ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






