“என் வாழ்க்கையை மாற்றியவர் அட்லி” – இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நெகிழ்ச்சி.!
இயக்குநர் அட்லி தமக்கு அளித்த மறக்க முடியாத அனுபவம் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ள “பவழமல்லி” என்ற தனிப்பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் அறிமுக நிகழ்வு சென்னை நகரில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சாய் அபயங்கர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லி இணையும் புதிய திரைப்படத்தின் இசை அமைப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த சாய் அபயங்கர், அந்தப் படத்திற்கான இசை அமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தாம் அட்லியை முதன்முதலில் சந்தித்த போது எந்த திரைப்படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையிலேயே இருந்ததாக கூறினார். அந்த சந்திப்பில் ஒரே ஒரு பாடலை மட்டுமே அட்லிக்கு கேட்டுக் காட்டியதாகவும் தெரிவித்தார்.
அந்தப் பாடலைக் கேட்ட உடனேயே “எனது அடுத்த திரைப்படத்துக்கு நீ இசையமைக்க முடியுமா?” என்று அட்லி கேட்டதாகவும், அது தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் சாய் அபயங்கர் கூறினார்.
அட்லி தமக்கு வழங்கிய நம்பிக்கையே தமது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்ததாகவும், அவரிடம் தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அவரது இந்தக் கருத்தின் மூலம் அந்த தகவல் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.