‘சலார் 2’ தயாரிப்பு பணிகள் விரைவில் ஆரம்பம் – தயாரிப்பாளர் தகவல்.!
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சலார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சலார் 2’ விரைவில் தயாரிப்பில் இறங்கவுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.‘சலார்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பிரம்மாண்ட வெற்றியை பெறவில்லை என்றாலும், உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இணையத் தளங்களிலும் அதிகம் பார்வையிடப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
படத்தின் கதைக்களம் இன்னும் முழுமையடையாத நிலையில், இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும் என்பது குறித்து ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வருகின்றனர்.இதுகுறித்து வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பிரசாந்த் நீல் தற்போதைய காலகட்டத்தில் பணியாற்றி வரும் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகும் என்றும், அவருடைய பணியாற்றும் திறமை மிகுந்தது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ‘சலார்’ உலகளவில் வர்த்தகரீதியாக வெற்றிபெற்ற திரைப்படமாகும் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘சலார் 2’ மிகப் பெரிய அளவிலான தயாரிப்பாக அமையும் என்றும், அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பல்வேறு ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாகவும், அதற்கான நல்ல செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
தற்போது பிரசாந்த் நீல் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் ‘சலார் 2’ திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.