தனித்துவமான கதை அமைப்பில் உருவாகும் ‘ஓ பட்டர்பிளை’ திரைப்படம்.!
விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓ பட்டர்பிளை திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, அதுல், நாசர், லட்சுமி பிரியா, கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வைசாக் சோம்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பலாம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் விஜய் ரங்கநாதன் கூறியதாவது: “தனித்துவமான திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் சினிமாவுக்கு வந்தேன். ‘ஓ பட்டர்பிளை’ அப்படிப்பட்ட முயற்சியாக உருவாகியுள்ளது. ஏற்கெனவே வெளியான எந்தப் படத்துடனும் இதை ஒப்பிட முடியாது.
தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும்போது, ‘இது எந்தப் படம் போல இருக்கும்’ என்று உதாரணம் கேட்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தப் படத்துக்கு அப்படி எந்தப் படத்தையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. அதனால் நாங்களே தயாரிக்க முடிவு செய்தோம்.
இது நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் உறவியல் திரில்லர். நிவேதிதா சதீஷ் சிறப்பாக நடித்துள்ளார். லட்சுமி பிரியா சன்னியாசி வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் பட்டாம்பூச்சி ஒன்று முக்கியக் கதாபாத்திரமாகவே இடம்பெறுகிறது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்,” என்றார்.