அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருக்கு கொலை மிரட்டல் – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை.!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராக மர்மநபர்களால் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எவ்.யு. வூட்லர் உத்தியோகபூர்வமாக தெரிவித்தார்.அவிசாவளை பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மிரட்டலின் பின்னணியில் உள்ள நபர்களை அடையாளம் காண பல குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிரட்டல் விடுக்கப்பட்ட விதம் மற்றும் அதன் நோக்கம் குறித்து தற்போது மேலதிக சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.