சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஆறு சிறுவர்கள் .!
பாணந்துறை – நல்லூருவ, காலி வீதியில் அமைந்துள்ள சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தப்பிச் சென்றவர்களில் 12 வயதுடைய ஐந்து சிறுவர்களும், 16 வயதுடைய ஒரு சிறுவனும் அடங்குகின்றனர்.
இவர்கள் கொழும்பு 02, புவக்பிட்டிய, பொல்கஸ்ஓவிட்ட, நுகேகொடை, கொட்டாவ மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நேற்று மாலை 3.50 மணிக்கும் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் குறித்த நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.இது தொடர்பில் சிறுவர் இல்லத்தின்காப்பாளர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (25) மதியம் வரையிலும் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரின் அறிவுறுத்தலின் கீழ், பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் தப்பிச் சென்ற சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.