பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி பருத்தித்துறை நகர சபையில் தீர்மானம்.!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தால் கொண்டு வரப்படவுள்ளதாகக் கூறப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நகர சபை அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தவிசாளர் முன்வைத்த குறித்த தீர்மானம் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்திலிருந்து விலகியிருந்தனர். மொத்தம் 15 உறுப்பினர்களில் ஒருவரோ இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை.இதேவேளை, இன்றைய அமர்வில் முதலாவது கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டு, தேவையான திருத்தங்களுடன் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடத்தனை வலிக்கண்டி, பருத்தித்துறை முனை நடராசா அரங்கு உள்ளிட்ட நகர சபைக்கு சொந்தமான காணிகளை நிலஅளவீடு செய்து எல்லைப்படுத்துதல், சபை நடவடிக்கைகளுக்கான நிதி அனுமதிகளை வழங்குதல், மலக் கழிவு உறிஞ்சும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தல், வாழைத்தண்டு உள்ளிட்ட கழிவுகளை துகளாக்கும் இயந்திரம் ஒன்றை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டன.