அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது.!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் பெயரை தொடர்புபடுத்தி, பிரித்தானியாவின் ‘Channel 4’ தொலைக்காட்சி 2023 ஆம் ஆண்டு ஒரு விசேட ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.
அந்த ஆவணப்படத்தில், ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானின் செயலாளராக பணியாற்றிய அசாத் மௌலானா என்பவர், சுரேஷ் சாலே தொடர்பான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.
எனினும், 2024 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களால், அவர் தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.