சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது.!
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டாவது துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர் மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் உண்மையாகவே இரண்டாவது துப்பாக்கிதாரி தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நவீன முக அடையாளத் தொழில்நுட்பம் மூலம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவத்தில் டி-56 ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய பிரதான துப்பாக்கிதாரி ஏற்கனவே அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
துப்பாக்கிதாரியை பன்னிபிட்டியவிலுள்ள தங்குமிடத்திற்கு அழைத்து வந்த நபர், ஏற்கனவே தாய்லாந்துக்கு தப்பியோடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மூவர் முன்னதாக கஹதுடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், பெப்ரவரி 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலை தொடர்பான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.