தடைகளையும் தாண்டி முன்னேறுவேன்: சிவகார்த்திகேயன் வெளிப்படை கருத்து.!
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேச்சல் ரெபேகா, முத்துக்குமார், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பிப்ரவரி 27ஆம் திகதி வெளியாக உள்ளது.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு உரையாற்றினார்.அவர் கூறியதாவது:சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களிலிருந்து தொடங்கி, மக்கள் என்னை கதாநாயகனாக ஏற்றுக்கொண்டனர். எனது நண்பர்களுக்கும் சினிமாவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தொடங்கப்பட்டது. திருச்சியிலிருந்து கனவோடு வந்தவர்களுடன் இணைந்து ‘கனா’ திரைப்படத்தை தயாரித்தோம்.
அதன் பின்னர் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளோம்.‘தாய் கிழவி’ கதையை கேட்டவுடனேயே இதை தயாரிக்க முடிவு செய்தேன். இந்தப் படத்தில் பல புதிய திறமைகளை உருவாக்கியுள்ளீர்கள் என்று நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.‘
தாய் கிழவி’ கதாபாத்திரத்துக்கு ராதிகா சரத்குமாரைத் தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என்பதை படம் பார்த்த பிறகு அனைவரும் உணர்வார்கள். ‘சேயோன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் சிவகுமாருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்.
எனக்கு இந்த துறை வழங்கிய அன்புக்கும் ஆதரவுக்கும் பதிலளிக்கும் வகையில் படங்களை தயாரித்து வருகிறேன்.
யாருக்கும் போட்டியாக இல்லை. எனது படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பேற்கிறேன். ஆரம்பத்திலிருந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால் சிலர் தடைகளை ஏற்படுத்தினாலும், அவற்றைத் தாண்டி முன்னேறத் தயார்,” என அவர் தெரிவித்தார்.