அட்டப்பள்ளம் கடலரிப்பு தீவிரம்: உடனடி தடுப்பு நடவடிக்கை கோரி மக்கள் வேண்டுகோள்.!
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பகுதி கடலில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலரிப்பை தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழமையான பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் கிராமமாக விளங்கும் அட்டப்பள்ளத்தில் அண்மைக்காலமாக கரையோரப் பகுதிகள் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து கடலரிப்பு காணப்பட்டபோதிலும், சமீப காலங்களில் அது மிகுந்த அளவில் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 500 மீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பு கடலுக்குள் சென்றுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்னைத் தோப்புகள் அதிகளவில் காணப்படும் இப்பகுதியில் தினமும் தென்னை மரங்கள் கடலில் மூழ்கி வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அருகிலுள்ள ஒருவரால் கடலுக்குள் பாறைகள் கொட்டப்பட்டதன் பின்னரே கடலரிப்பு வேகமடைந்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பல்வேறு தரப்புகளிடம் அறிவித்தபோதிலும் இதுவரை தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.கரையோரப் பகுதியில் வாழும் மக்கள் அச்சநிலையிலேயே தினமும் வாழ்ந்து வருவதாகவும், இரவில் உறங்கும்போதும் கடல் முன்னேறிவிடுமோ என்ற பயம் நிலவுவதாகவும் கூறுகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்டஅமைச்சுகள் ஆகியவற்றின் கவனத்திற்கு முன்னதாக எடுத்துச் செல்லப்பட்டபோதிலும் இதுவரை நிலையான தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ. எல். அப்துல் லத்தீப் விளக்கமளிக்கையில், நிலைமை குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆறு இடங்களில் கடலரிப்பைத் தடுக்கும் அணைகள் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அண்மையில் அப்பகுதிக்கு விஜயம் செய்து, கடலரிப்பைத் தடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.