மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் தொடரும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி.!
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தத் திட்டம் நிறுத்தப்படாது என திட்டவட்டமாகக் கூறினார்.
மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள மைதானத்தின் கட்டுமானப் பணிகளை, முறையான சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறைகள் நிறைவடையும் வரை தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியிருந்தது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் அவசியம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பெரிய திட்டங்களை நிறைவேற்ற, தேவையான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் அவசியம். அதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
திட்டத்தை விரைவாகவும் தடையின்றியும் நிறைவு செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.சுற்றுச்சூழல் அதிகார சபையின் அனுமதி கிடைத்ததும், இடைநிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.