அம்பாறை மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுப்பு.!
நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து சேகரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாகவும் கையெழுத்து சேகரிக்கும் பணி ஒன்று இன்று காலை (22.02.2026) முன்னெடுக்கப்பட்டது.
இக் கையெழுத்து சேகரிக்கும் பணியானது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் துரையப்பா காந்தன், ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த பணியினை முன்னெடுத்திருந்தார்கள்.
இந்த இரண்டு சட்டங்களும் எமக்கு தேவையில்லை என்று பல பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்து இடுவதை இங்கு அவதானிக்க முடிந்தது.

