டைனமைட் வெடிபொருட்களுடன் இருவர் கைது.!
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழன் (19) உத்தரவிட்டுள்ளது.
மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் டைனமைட் வெடிபொருட்களை வைத்திருந்த இரு மீனவர்களை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் மூன்று தொகுதி டைனமைட் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் இரு மீனவர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரம் கைப்பற்றப்பட்ட ‘டைனமைட்’ வெடிபொருட்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
