மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும் துயரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
முகநூல் பதிவொன்றுக்கு கருத்தினை வெளிப்படுத்தியபோது, இஸ்லாமிய மதத்திற்கும், நபிகள் நாயகம் அவர்களுக்கும் அவமதிப்பினை ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டு, 5 வருடகால சிறைத் தண்டனைக்கும், 03 மில்லியன் ரியால் தண்டத்துக்கும் உள்வாங்கப்பட்டார் என்றும் தெரிய வந்துள்ள நிலையில், இப்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஒரு நபர் தான் சாராத மதமாக இருப்பினும், அந்த மதத்தை அவமதிப்பு செய்யக்கூடாது. அந்த மதத்தையும் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமான விடயமாகும். எனவே, ஒரு மதத்தை – அதனது தூதரை – அவமதிப்பு செய்தார் என்பது தவறானதொரு செயலாகும்,
இருந்தாலும், அவர் செய்த குற்றத்திற்கு பொது மன்னிப்பு கோரியுள்ளதாகவும் கூறப்படுவதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பின், அதனை அவரது பெற்றோர்களது மனிதாபிமான கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் அதனை இரத்துச் செய்து, பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பது உகந்தது என எண்ணுகிறேன்.
இது தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
மேற்படி விடயம் தொடர்பில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றென்றும் எனது நன்றி உரித்துடையது என்றும் தெரிவித்துள்ளார்.