ஊழல் வழக்குகளில் இருந்து தப்புவதற்கான வெற்றுக் கூச்சலே மொட்டுக் கட்சியின் பேரணி.!
“அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக, தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து சட்டம் மற்றும் நீதித்துறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு வெற்றுக்கூச்சலாகவே அமைந்தது” என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை அழைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
“ஊழலுக்கு எதிரான அரசு எதிர்ப்புப் பேரணி எனக் கூறி நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள், நெல்லுக்கான நியாயமான விலை, மீனவர்கள் மற்றும் வர்த்தகர்களின் அன்றாடச் சிரமங்கள், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற எந்தவொரு அடிப்படை மக்கள் நலன் குறித்தும் மேடையில் பேசிய பேச்சாளர்கள் எவருமே சிறிதும் பேசவில்லை.
மாறாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸார் மற்றும் நீதிமன்றங்கள் தங்களுக்கு எதிராக முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதையும், கைதுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையுமே முதன்மை நோக்கமாகக் கொண்டே அவர்கள் உரையாற்றினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2011 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எல்.ரி.ரி.ஈ. அமைப்பானது தடை செய்யப்பட்ட அமைப்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவது, அதன் உறுப்பினராக இருப்பது, அந்த அமைப்பை ஊக்குவிப்பது அல்லது அதற்கான கூட்டங்களை நடத்துவது என்பன முற்றிலும் சட்டவிரோதமாகும்.
ஆனால், அதே மஹிந்த ராஜபக்ஷ மேடையில் அமர்ந்திருக்கையில், அர்ச்சுனா என்பவர் மேடையேறித் தடை செய்யப்பட்ட அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றியுள்ளார். அதனைப் பார்த்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களும் தலைவர்களும் கைதட்டி வரவேற்பளித்துள்ளமை நாட்டின் அரசமைப்பையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் மிக மோசமாக மீறும் செயலாகும்.
இத்தனை காலம் தங்களைச் சிங்களத் தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்றும், இராணுவத்தினரைப் பாதுகாத்தவர்கள் என்றும் கூறி அரசியல் செய்து வந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திஸ்ஸ குட்டியாரச்சி போன்றவர்கள், மேடையில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக உரையாற்றப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் சாதித்துள்ளனர். கீழிருந்த ஆதரவாளர்களும் அதற்குத் தாளம் போட்டு கைதட்டி வரவேற்பளித்துள்ளனர். இது அவர்களின் போலித் தேசியவாதத்தையும், வெற்று அரசியல் சுயநலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வகையிலும், தடை செய்யப்பட்ட அமைப்பை பகிரங்கமாக ஊக்குவிக்கும் வகையிலும் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் உடனடியாக அவசரப் புகார் அளிக்கப்படவுள்ளது.
இத்தகைய சட்டவிரோத செயல்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். தங்களின் சுயநல அரசியல் இலாபத்துக்காகவும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்புவதற்காகவுமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பந்தயப் பொருளாக ஆக்கியுள்ளனர்.” – என்றார்.