ஸாம்ஃபியாவில் இணையைத் தேடி 4,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யும் ஆப்பிரிக்கக் காட்டு நாய்கள்!
இணையை தேடி ஸாம்ஃபியாவில் (Zambia) நாடு முழுவதும் சுமார் 4,000 கிலோமீட்டர் (2,485 மைல்கள்) தூரத்தைக் கடந்து ஆப்பிரிக்க காட்டு நாய்கள் (African Wild Dogs) வரலாற்று சாதனை படைத்துள்ளன.
ஆப்பிரிக்க நிலப்பரப்பில் பாலூட்டி விலங்கு ஒன்று இணையை தேடிப் பயணித்த மிக நீண்ட தூரம் இதுவே ஆகும் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மூன்று ஆண் காட்டு நாய்கள் அடங்கிய கூட்டம், மனித நடமாட்டம் மற்றும் தலைநகர் லூசாக்கா (Lusaka) உட்பட முக்கிய தொழில் நகரங்களைத் தவிர்த்து, 8 மாத காலத்தில் வளைந்து நெளிந்து 4,000 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்துள்ளது.
நேர்கோட்டில் இதன் தூரம் 260 மைல்கள் என்றாலும், தடையான நிலப்பரப்புகளைக் கடக்க அவை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.
ஆப்பிரிக்க காட்டு நாய்கள் தாம் பிறந்த கூட்டத்திற்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியாது.
இதனால், இரண்டு அல்லது மூன்று வயதில் அவை புதிய இணை மற்றும் புதிய நிலப்பரப்பைத் தேடி இத்தகைய ஒருவழிப் பயணத்தை (Dispersals) மேற்கொள்கின்றன.
இந்த நீண்ட பயணத்தில் மனிதர்களின் சட்டவிரோத வேட்டை வலைகள் (Snares) மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
மூன்று ஆண் நாய்கள் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்த நிலையில், இதைப் போன்று பயணித்த மூன்று பெண் நாய்களில் இரண்டு நாய்கள் வேட்டை வலைகளில் சிக்கி உயிரிழந்தன.
மொண்டானா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்காட் க்ரீல் (Scott Creel) தலைமையிலான இந்த ஆய்வு, Ecology இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வேலி அடைக்கப்படாத ஆப்பிரிக்க காட்டு நாய் கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிலேயே இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
காட்டு நாய்கள் மற்றும் யானைகள் போன்ற அதிக தூரம் பயணிக்கும் உயிரினங்கள் வாழ, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை மட்டும் தீவுகளாகப் பார்க்காமல், அவற்றை இணைக்கும் இயற்கை வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்று சூழலியல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.