பெருமளவான போ*தைப்பொருளை கைவிட்டு தப்பிச் சென்ற பயணி.!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளிலிருந்து 320 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருள் 60 காற்றுப்புகாத பொதிகளில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 32 கிலோ 91 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்றின் ஊடாக இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பயணப் பொதிகளின் உரிமையாளரான பயணி, விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவற்றை கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விமான நிலையத்தின் சிசிரிவி கமராக்களின் காட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் பட்டியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
