நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!
“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன் சிறை செல்கின்றார்கள் என்பதை நாட்டின் அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்” என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“அரசுக்குச் சவால் விடுவதாகக் கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அனுராதபுரத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள்கூட ‘நாமல் திருடர்’ என்று முழக்கமிட்டவாறே பேரணியாகச் சென்றனர்.
இலவச மதுபானங்களை வழங்கி கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்கும் தங்களின் பழைய அரசியல் கலாச்சாரத்திலிருந்து ராஜபக்ஷக்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. எப்படியாவது முறையற்ற வழிகளிலாவது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றே இவர்கள் தற்போதும் நினைக்கின்றார்கள்.
ஊழலுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளைச் சட்டத்தின் பிரகாரம் முன்னெடுப்பது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாக அமைய முடியும்?
ராஜபக்ஷக்களின் தவறான நிர்வாகத்தினால் தான் இந்த நாடே வங்குரோத்து நிலையை அடைந்தது என்று நாட்டின் உயர்நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வளவு உண்மைகள் வெளிப்பட்ட பின்னரும், இவர்கள் நாட்டு மக்களை இன்னமும் முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு இவ்வாறு செயற்படுவது முற்றிலும் முறையற்ற செயலாகும்.” – என்றார்.