AI தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் : சீனா எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை குறித்து “அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துக்களைப் பரப்புவதையும்”, “தீங்கிழைக்கும் போட்டியையும்” நிறுத்த வேண்டும் என்று சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் Anthropic நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய் (Dario Amodei) AI வளர்ச்சியில் சீனா முந்திச் செல்வதைத் தடுக்கும் வகையில் அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் மனிதகுல நன்மைக்கான முறையில் AI என்ற செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாக்குன் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக,அமெரிக்காவின் முன்னணி AI ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து அண்மையில் வெளியேறிய ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் (Jacob Coxon) உட்பட பல நிபுணர்கள் தற்போதைய வேகத்தில் AI வளர்ச்சி தொடர்ந்தால் அது மனிதகுல அழிவுக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்திருந்தனர்.
இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.
AI போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே உலகை ஆளுவார்கள் என்பதால் சீனாவை விட அமெரிக்கா இதில் வேகமாகவும் முன்னணியிலும் இருப்பதே தனது முதன்மை இலக்கு என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்தநிலையில், AI ஆபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.
இதற்கிடையில், அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள சந்திப்பில் AI தொடர்பான பேச்சுகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.