வாரத்துக்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் அரசியல் நாடகத்தையே நடத்துகின்றது அநுர அரசு.!
தேசிய மக்கள் சக்தி அரசு தனது பொருளாதார மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக, வாரத்துக்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து மக்கள் மத்தியில் தற்காலிகப் பரபரப்பை உருவாக்கும் மலிவான கண்காட்சியாக இதனை நடத்தி வருகின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அரசு தனது அரசியல் தோல்விகளையும் நிர்வாகக் குறைபாடுகளையும் மறைக்கவே எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்துக் கைது செய்து அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையும் தற்காலிகப் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் விடுவிக்கப்படுவார்.
தங்களது ஆதரவாளர்களுக்கு ஏதோ சாதனை செய்துவிட்டதாகக் காட்டுவதற்காகவே வாரம் ஓர் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து பின்னர் விடுவிக்கும் உத்தியை அரசு கையாள்கின்றது.
தேர்தல் காலத்தில் மக்களுக்குப் பல போலி வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தங்களின் கறைபடிந்த பிம்பத்தை மறைக்க மீண்டும் பழைய தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். மக்கள் தற்போது தெளிவடைந்துவிட்டதால் இதுபோன்ற போலி நாடகங்களை நம்பமாட்டார்கள்.
அரசுக்கு மக்கள் மத்தியில் உண்மையான செல்வாக்கு இருக்குமானால், நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்காமல், தைரியமாகத் தேர்தலைச் சந்தித்து மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.
ராஜபக்ஷக்களின் ஊழல்களுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தவர்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகச் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தது தங்களது தரப்புதான். தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் முறையாகத் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, அதை ஒரு மலிவான ஊடகக் காட்சியாக மாற்றுவது சட்டத்தையும் நீதியையும் கேலிக்கூத்தாக்கும் செயாலாகும்.” – என்றார்.