நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!
எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை சங்க தேரர் சந்தபோதி தலைமையில் சம்புத்த பூஜை என்ற பெயரில் பௌத்த நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி சைவமக்களும் வழமையான விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தினத்தில் அந்தபகுதியில் இருதரப்பும் ஒரே நேரத்தில் வழிபாட்டிற்கு செல்வதால் சமாதான குலைவு ஏற்படும் என்று நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரும் பௌத்த தேரர் தரப்பும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில் தொல்பொருள் பகுதிகளுக்கு சேதத்தை விளைவிக்காமல் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளாமல் பூஜை வழிபாட்டை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் இருதரப்பிற்கும் கட்டளையிட்டுள்ளது.
இதேவேளை சைவ மக்களின் பூஜைகளை அன்றையதினம் மேற்கொள்வதால் சமாதான குலைவு ஏற்படலாம். எனவே அன்றையதினம் அதற்கு தடைவிதிக்குமாறு நெடுங்கேணி பொலிஸார் மற்றும் தேரரின் தரப்பினால் மன்றில் இறுக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
எனினும் வெடுக்குநாறிமலையில் வழிபடும் சுதந்திரத்திற்கு தடை ஏற்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய வவுனியா நீதவான் நீதிமன்றம் அவர்களது கோரிக்கையினை கருத்தில் எடுக்கவில்லை.
இந்நிலையில் அன்றைய தினம் சைவமக்களும் வழமையான பூஜை வழிபாடுகளில் ஈடுபட மன்று அனுமதி வழங்கியது.
இதேவேளை ஆலய நிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருஅருள் அவர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.