பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!
தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் இலக்கின் கீழ், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், துபாய் வழியாக லண்டன் செல்கிறார்.
எதிர்வரும் 16-ஆம் திகதி வரை அவர் லண்டனில் தங்கி தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசுவதுடன், அங்கு வசிக்கும் தமிழ் மக்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
பின்னர் 17-ஆம் திகதி காலை 8 மணிக்குத் துபாய் வழியாகச் சென்னை திரும்பவுள்ளார்.
அதிகாரிகள் அரசு முறை பயணங்களுக்குத் தனி வானூர்தியை பயன்படுத்துவது வழக்கமாக உள்ள நிலையில், முதல்வர் விஜய் இந்த முறை பயணிகள் வானூர்தியிலேயே லண்டனுக்கு பயணம் செய்கிறார்.
அவருடன் உயர் மட்ட அதிகாரிகள் குழு மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் லண்டன் செல்கின்றனர். இதனிடையே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இரவே லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் 13-ஆம் திகதியன்று சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.
அதன்போது, 1.2 லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் இந்த முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அத்துடன், லண்டனில் உள்ள தமிழ் சமூகத்தினரும் முதலமைச்சரை வரவேற்க விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.