நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியில்.!
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவோ அல்லது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதை அறிவிக்கவோ இக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மாறாக, பழைய பொய்களை மீண்டும் சமூகத்தில் பரப்பி, அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியை மறைத்து, மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கே இக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சாடினார்.
தேசிய மக்கள் சக்தியின் பேருவலைக் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காகப் பேருவலை மீன்பிடித் துறைமுகத்திற்குள் படகுகள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்ததாகவும், இதனால் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்தபோதிலும், ஜனாதிபதியின் கூட்டங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த சில மாதங்களில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் 17 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளமை நாட்டின் உண்மையான பாதுகாப்பு நிலைமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளின் கூட்டங்களை கடுமையாக விமர்சித்த அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அரச வாகனங்கள், பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் மற்றும் பெருந்தொகை நிதியைச் செலவிட்டுத் தனது கட்சியின் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, இது அரச நிதி மற்றும் வளங்களை நேரடியாகத் துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும் எனக் குற்றம் சாட்டினார்.
சுகாதாரத் துறை தொடர்பாகப் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பாக சுகாதாரத் துறைக்கான VAT வரிகளை நீக்குவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி, தற்போது மக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், மருத்துவரின் பரிந்துரையுடனேயே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற புதிய முறையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறினார். இது இலவச சுகாதார சேவையை படிப்படியாக இல்லாதொழிக்கும் முயற்சியாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைப்பதற்கு முன்பே ஜனாதிபதி அது குறித்துக் கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே கணித்துச் செயல்பட முடியாது என்றும், அரசியலமைப்பு ரீதியான குழப்பங்களைத் தவிர்க்க இது தொடர்பில் மக்கள் தீர்ப்பு (சர்வஜன வாக்கெடுப்பு) நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்துப் பேசிய அவர், அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட சுமார் 10,000 மில்லியன் நஷ்டம், துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் இரகசியமாக வெளியேற்றப்பட்டமை மற்றும் திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர்கள் இழப்பு போன்ற தவறான நிர்வாகச் செயல்பாடுகளினாலேயே நாட்டில் கறுப்புப் பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக, எதிர்க்கட்சி அரசியலை அழிக்கப்போவதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பு அமைச்சர்கள் வெளியிடும் கூற்றுகள் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகும் எனக் கண்டித்த அவர், மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் எந்தவொரு அரசாங்கத்தையும் மக்கள் இறுதியில் விரட்டியடிப்பார்கள் என்றும், எதிர்க்கட்சியை அச்சுறுத்த அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.