நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துபவர்கள் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களே.!
பொருளாதார ரீதியில் பாழடைந்திருந்த இலங்கையை மீண்டும் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் பங்களிப்பே மிக முதன்மையானது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் இலங்கைக்கு 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சுற்றுலாத் துறையைப் போன்றே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனுப்பும் அன்னியச் செலாவணியே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்ல பெரிதும் உதவுகிறது.
எனவே, நாட்டிற்குப் பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை, பாதுகாப்பு, நலன்புரி மற்றும் அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறித்து பொதுமக்களிடையே பொதுவாக நிலவி வரும் எதிர்மறையான கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும், அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.