டெங்குவை விட சாலை விபத்துகளினால் ஏற்படும் உ*யிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிப்பு.!
டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்தி நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயினால் நாட்டில் சுமார் 60 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் சாலை விபத்துகள் காரணமாக 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
இது டெங்கு உயிரிழப்புகளை விட சுமார் 30 மடங்கு அதிகம் என்றும், சராசரியாக தினமும் 4 முதல் 5 பேர் வரை வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களாவர்.
குறிப்பாக முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் மிதிவண்டிகளை பயன்படுத்துவோரே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக இருக்கும் தந்தை அல்லது சகோதரன் உயிரிழப்பதால், அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
மேலும், உயிரிழப்புகள் தவிர்த்து விபத்துகளினால் நிரந்தர அல்லது தற்காலிக ஊனத்திற்குள்ளாவோரின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும், இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பெருமளவிலான நிதியை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் பேருந்துகளுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி, சாரதிகளின் வீதி ஒழுக்கமின்மை, கவனக்குறைவாக திடீரென யூ திரும்பல் (‘U-Turn’) எடுத்தல், பாதைகளில் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணாமை மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன.
அத்துடன் பாதசாரி கடவைகளில் பாதசாரிகள் கவனமின்றி சட்டென வீதியை கடக்க முயல்வதும், வாகன ஓட்டுநர்கள் வேகத்தை கட்டுப்படுத்தத் தவறுவதும் தொடர் விபத்துகளுக்கு வழிகோலுகின்றன.
எனவே, சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரசபைகள் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வீதி விதிமீறல்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவதுடன், பாடசாலை மட்டம் முதல் தேசியக் கொள்கை வரை வீதி பாதுகாப்பு மற்றும் வீதி ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வை சேர்க்க வேண்டும் என்றும், வெறும் ஊடக அறிவிப்புகளுடன் நிறுத்திவிடாமல் வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான தேசிய கொள்கை மற்றும் சட்டரீதியான வேலைத்திட்டங்களை அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.