கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது.!
யானைத் தந்தங்களிலிருந்து பெறப்பட்ட 10 கஜமுத்துக்களை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்களை வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பாந்தோட்டை, மாத்தறை – தங்காலை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த 26, 28 மற்றும் 31 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (04) அநுராதபுரம் புனித பூமி பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 10 கஜமுத்துக்கள் மற்றும் அவர்கள் பயணித்த சொகுசு கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.