ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வெசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட ஹட்டன் – டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணொருவரும், ஹட்டன் – டிக்கோயா காபெக்ஸ் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் கர்ப்பிணித் தாய் என்பதால், அவரது சுகாதார நிலையைக் கருத்திற்கொண்டு எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் இருவரையும் பிணையில் விடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஹட்டன் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மன்றில் கருத்துத் தெரிவிக்கையில், முதற்கட்ட விசாரணைகளில் மோசடி செய்யப்பட்ட தொகை தற்போது 250 இலட்சம் ரூபாயைக் (2.5 கோடி) கடந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தணிக்கை நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
இதேவேளை, அஸ்வசும கணக்கில் பணம் வைப்பிலிடப்படாத பயனாளிகள் நேற்று (24) நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது கணக்குகளைப் பரிசோதிப்பதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
இதன்போது, அஸ்வசும பயனாளிகளின் பெயர் பட்டியல் விரைவில் பிரதேச செயலகத்திலும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என அதிகாரிகள் அவர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.