டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’ அல்லது ‘குடு லலித்’ என்பவர் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இவர், களுத்துறை தெற்கு, தூவ பன்சல வீதியில் வசித்து வந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட அதிகாரிகள் குழுவொன்றினால் டுபாயில் கைதுசெய்யப்பட்ட அவர், இன்று அதிகாலை 5.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-226 விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஹங்வெல்ல, அவிசாவளை, கட்டுகுருந்த, பாதுக்க, மீகொட மற்றும் கல்தொட்ட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சி-4 ரக அதிபயங்கர வெடிபொருட்கள் தொகையொன்றை தன்னகத்தே வைத்திருந்ததாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

