மன்னார் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா; மூன்று பிரிவுகளில் 17 கலைஞர்கள் கௌரவிப்பு.!
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்று (20) வியாழக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
காலை 9.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து பண்பாட்டு பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணியில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய கலை கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் குறித்த கலாச்சார பேரணி இடம்பெற்றது.
குறித்த பேரணியானது மன்னார் மன்னார் பிரதான பாலத்தடியில் ஆரம்பமாகி மன்னார் நகரசபை மண்டபம் வரை சென்றது.
இதன்போது விருந்தினர்களாக கலந்து கொண்ட வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.செல்வன், மனோன்மணி அறக்கட்டளை பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் இந்து மதகுரு தர்ம குமார குருக்கள் உள்ளடங்களாக அருட்தந்தையர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் அமரர் செழுங்கலை வித்தகர் டொனால்ட் தேவதாசன் அல்மேடா அரங்கில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் போது கலைஞர்களின் பாடல், நடனம், மங்கள நாத இசை சங்கமம், குழு இசை, குழு நடனம், களி கம்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து மன்னெழில் (IV) சிறப்பு மலர் வெளியீடு இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பு இடம் பெற்றது. இதன்போது மூன்று பிரிவுகளில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 17 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












