நெல் கொள்வனவு எனக் கூறி விவசாயிகளை ஏமாற்றும் அரசு.!
நெல் கொள்வனவு செய்கின்றோம் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல் களஞ்சியசாலைக்கு முன்பாக நேற்று தொடக்கம் நெல்லை விற்பனை செய்வதற்காக வந்த விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்யாமல் அதிகாரிகள் நிலையத்தினை பூட்டிச் சென்ற நிலையில் விவசாயிகள் நிர்க்கதியான நிலையினை காணமுடிந்தது.
18ஆம் திகதியும் 19ஆம் திகதியும் நெல் களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்யப்படும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை நெல் களஞ்சியசாலைக்கு விவசாயிகள் நேற்று நெல்லை விற்பனை செய்வதற்கு கொண்டுசென்றுள்ளனர்.
இதன்போது அங்கு அதனை கொண்டுசெல்வதற்கான வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கு நெல் சோதனை செய்யப்பட்டு மட்டக்களப்பு நெல் களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் உள்ள கள்ளியங்காடு நெல் சந்தைப்படுத்தும் நிலையத்திற்கு விவசாயிகள் நெல்லை கொண்டு சென்று காத்திருந்துள்ளனர்.
நேற்று காலை சென்றவர்களிடம் நேற்று மாலை வரையில் நெல்லை பெற்றுக்கொள்ளாத நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் நெல் சந்தைப்படுத்தும் அதிகாரிகள் நாளை காலை 8.00 மணியளவில் நெல்லைக் கொள்வனவு செய்வதாக கூறிவிட்டு களஞ்சியசாலையினை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நெல்லைக் கொண்டு சென்ற 16க்கும் அதிகமான உழவு இயந்திரங்களும், டிப்பர்களும் களஞ்சியசாலைக்கு முன்பாகவே தரித்து நின்ற நிலையில் இன்றைய தினம் காலை வந்த அதிகாரிகள் தங்களிடம் காசு இல்லை நெல்லைக் கொண்டுசெல்லுமாறு கூறிய நிலையில் நெல் களஞ்சியசாலை முன்பாக விவசாயிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதிகளவான பணத்தினை செலவளித்த நிலையிலும் நெல்லைக் கொண்டுவந்த பின்னர் அவற்றினை வாங்குவதற்கு பணம் இல்லை என கூறமுடியாது எனவும் நாளை நெல்லைக் கொள்வனவு செய்வதாக கூறிவிட்டு இன்று இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விவசாயிகள் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருமளவான பணத்தினை செலவளித்து இந்த நெல்லைக் கொண்டுவந்ததாகவும் நெல்சந்தைப்படுத்தும் அதிகாரிகள் கூறியதன் பின்னரே இதனைக் கொண்டுவந்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை அனுபவித்த நிலையில் நெல் கொள்வனவு எனக்கூறி அரசாங்கம் தம்மை நஷ்டத்திற்குள் தள்ளியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தமது நெல்லை கொள்வனவு செய்யும் வரையில் அப்பகுதியிலிருந்து தமது வாகனங்களை கொண்டு செல்வதில்லை எனவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர்.




