காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு.!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த நிலையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது அவருடன் காணாமல் ஆக்கப்பட்ட அவரின் உதவியாளரான பேட்ரம் பிரான்சிஸ் நினைவுகூரப்பட்டார்.
ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அருட்தந்தையின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமான நடைபெற்றது.
1923ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர், தனது 17 வயதில் இலங்கைக்கு வந்து தான் சாகும் வரையில் கிழக்கு மண்ணில் வாழ்ந்து, திருகோணமலை நகரத்து மண்ணிற்கும், மட்டக்களப்பு மண்ணிற்கும் கல்வித்துறை மற்றும் விளையாட்டு துறைகளுக்கு அளப்பரிய சேவையாற்றிய, இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைக்காய் குரல் கொடுத்தவர் ஆவார்.
அமெரிக்காவில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற யேசு சபையில் இணைந்த அருட்தந்தை ஜோன் ஹேர்பட் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் அடிகளாரின் சேவையை தொடர்ந்து அந்தக் கல்லூரியை இலங்கையில் தேசிய ரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் “வெல்லப்பட முடியாத அணி” என்னும் நிலைக்கு உயர்த்தினார்.
இதனைவிட இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வந்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த, அருட் தந்தை அவர்கள் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஏறாவூர் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வாழைச்சேனை பகுதியில் இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டிருந்த தமிழ் மக்கள், கிறிஸ்தவ குருவானவர்கள், அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றிவிட்டு, தனது வாகன ஓட்டுனரான ‘பேட்ரம் பிரான்சிஸ்’ என்ற தமிழ் இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, ஏறாவூர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
அவரை நினைவுகூரும் வகையில் இன்று ஊறணியில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


